இன்றைய தியானம்
- Nov 1, 2016
- 1 min read
“...எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.” - 2கொரி.12:10

மிஷனெரி தம்பதியினரான ரேயும், சோபியாவும் மேற்கு ஆப்பிரிக்காவில் 40 வருடத்திற்கும் மேலாய் தேவனுடைய ஊழியத்தை செய்து வந்தனர். கடுமையான சூழ்நிலையிலும் மிகவும் துணிச்சலாக கர்த்தருடைய ஊழியத்தைச் செய்தனர். இவர்கள் செய்த ஊழியத்தை யாதொருவர் கண்டாலும் தேவனை மகிமைப்படுத்தாமல் இருக்கமுடியாது. அவ்வளவாய் தேவனுடைய பணியை சிறப்பாக செய்தனர். இந்நிலையில் திடீரென ஒருநாள் சோபியா நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார். தன்னுடைய உடைக்கு பட்டன் போடவோ, தண்ணீர் உள்ள கப்பை தூக்கிக் குடிக்கவோ முடியாத இயலா நிலைக்கு தள்ளப்பட்டார். இவ்வளவு மோசமான சூழலிலும் கசப்படையவோ, தனக்குத்தானே பரிதாபப்பட்டுக் கொள்ளவோ இடங்கொடுக்கவில்லை. தன்னுடைய பெலவீனமான நேரங்களில் தனக்குள் அமைதியாய் சொல்லிக்கொண்ட வார்த்தைகள் இவைதான், “சோபியா நீ இதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய். இதற்காகவே இயேசுவை தெரிந்து கொண்டிருக்கிறாய்” என்பதாகும். ஓடித்திரிந்து ஊழியம் செய்ய மாத்திரமல்ல, இதற்காகவும் தேவன் என்னை அழைத்திருக்கிறார் என்பதே அவர்களின் எண்ணம்.
இன்றைய வேதபகுதியில் பவுலின் வாழ்வை கவனியுங்கள். அவர் தேவனுடைய நாமம் மகிமைப்படும்படியாக சிறப்பான ஊழியத்தைச் செய்த தேவமனிதன் ஆவார். ஊழியத்தின் மத்தியில் தனக்கு நீங்காத முள் போன்ற பெலவீனங்கள், நெருக்கங்கள் இருப்பதைக் கண்டார். இதைக் குறித்து பவுல் வருத்தமடையவில்லை. மாறாக அதின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவராக தேவனை மகிமைப்படுத்துகிறார். அதில் நான் பிரியப்படுகிறேன் எனவும் பவுல் களிகூருகிறார். கிறிஸ்துவுக்குள் இல்லாத ஒரு மனிதன் இச்செய்தியை வாசிப்பாரென்றால் இது மிகவும் கடினம் எனக் கூறுவார். தம்மை நேசிக்கும் தம்முடைய பிள்ளைகளிடம் தேவன் இப்படிப்பட்ட பாதைகளையும் அனுமதிக்கிறார் என்றால் உங்களால் இதை விசுவாசிக்க முடிகிறதா?
இச்செய்தியின் மூலம் தேவன் உங்களை பெலப்படுத்தவே விரும்புகிறார். அதி சீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது (2கொரி.4:17). ஆம், இதை வாசிக்கின்ற உங்களுக்காக பெரிய சந்தோஷம் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறது. தேவனுடைய நன்மைகளை அனுபவிக்கும்படி இப்பொழுதிருக்கிற பெலவீனங்களின் மத்தியிலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்யுங்கள். சகலத்தையும் நன்மைக்கேதுவாய் நடப்பிக்கிற தேவன் இந்த நாளில் உங்களுக்கு ஒரு அற்புதத்தைச் செய்வார். விசுவாசியுங்கள்.











Comments